

சென்னை: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு விமானங்கள் 12 என, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17 புறப்பாடு விமானங்கள், இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்கள் மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்று பாதைகளில் விமானங்கள் சுற்றி வந்து மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்படலாம் என்பதால், அந்த விமானங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
அதனால், பயணிகள் தங்களுடைய விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.