

அண்ணா நினைவு நாளையொட்டி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் பொது விருந்து நிகழ்ச்சியில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
அண்ணா நினைவு நாளில் ஆண்டுதோறும் முக்கிய கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இவ்வாண்டு, மாநிலத்தில் 309 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறவுள்ளது.
சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் கலந்து கொள்கின்றனர்.
சென்னையிலும், மாநிலத்தின் பிற இடங்களிலும் கோயில்களில் நடைபெறும் அண்ணா நினைவு நாளையொட்டி, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.