

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சுற்றுச்சூழல் வனம், உள்துறை, பள்ளிக் கல்வி, இளைஞர் நலத்துறை உள்ளிட்ட 6 துறைகளின் ரூ.3,291 கோடி மதிப்பிலான 27 முத்திரைத் திட்டங்களை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரிக்குள் இந்தப் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
அரசின் 24 நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த ரூ.3 லட்சத்து 17,693 கோடி மதிப்பிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த ரூ.3,291 கோடி மதிப்பில் செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றத்தை துறை அதிகாரிகளுடன் முல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
குறிப்பாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் மதுரை மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மையம் மற்றும் ராமநாதபுரத்தில்தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது இப்பணிகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
இதுதவிர, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா,மரக்காணத்தில் சர்வதேச பறவை மையம், கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், தஞ்சாவூரில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள்பிப்ரவரி 2-வது வாரத்துக்குள் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட வேண்டும்.
திண்டுக்கல்லில், தேவாங்கு பாதுகாப்பு மையம் பிப்ரவரிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், பள்ளிக்கல்வி துறையின் கீழ் கடலூரில் புதிய நூலகம் அமைக்கும் ஒப்பந்தப்பணிகளை விரைவாக முடித்து பிப்ரவரிக்குள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்க வேண்டும். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறையின்கீழ், ஆற்காட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் மீன்பிடிதுறைமுகங்கள் மற்றும் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும். பிற முத்திரைத் திட்டபணிகளையும் விரைந்து முடிக்கமுதல்வர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச்செயலர்நா.முருகானந்தம், துறை செயலர்கள் சுப்ரியா சாஹு, மங்கத்ராம் சர்மா, தீரஜ்குமார், அதுல் ஆனந்த், த.உதயச்சந்திரன், பி.சந்தரமோகன், சத்யபிரத சாஹு, ந.சுப்பையன் மற்றும் சிட்கோ மேலாண் இயக்குநர் ஆ.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.