

சென்னை: ‘‘ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 2,500 தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்’’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் நிறுவனர் ஆர்.இந்திரா தலைமையில், தலைவர் விசாலாட்சி, துணைத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடந்த மாநாட்டை, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இணைந்து தொடங்கி வைத்தனர். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப்பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர்கள் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் மருத்துவர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகச் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், புதிதாக 7 செவிலியர் கல்லூரிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 896 கிராம சுகாதார செவிலியர்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மாவட்ட நலச் சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் 4,724 புதிய செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் 2,500 தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிப்போம். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பிய பின், பொதுமக்கள் பலர் என்னிடம் கோரிக்கைளை முன்வைத்துள்ளனர். பேரவையில் தவறான வார்த்தைகளைப் பேசினால் நீக்குங்கள்.
ஆனால், அவர்கள் பேசியதை நாங்கள் பார்க்க வேண்டும். அதை நேரடி ஒளிபரப்பில் இருந்து நீக்க கூடாது. நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள், எப்படி பேசுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்கின்றனர். அதனால், பேரவையின் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருக்கிறேன். இவ்வாறு ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.