சுந்தர மகாலிங்கம் கோயிலில் பெண் அதிகாரியை செல்போனில் படமெடுத்த அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

சுந்தர மகாலிங்கம் கோயிலில் பெண் அதிகாரியை செல்போனில் படமெடுத்த அறநிலையத்துறை இணை ஆணையர் கைது
Updated on
1 min read

சாப்டூர் அருகே சுந்தரமகாலிங்கம் கோயிலில் தங்கியிருந்தபோது, பெண் அதிகாரியை செல்போனில் படமெடுத்த இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் கைது செய்யப் பட்டுள்ளார்.

மதுரை புது ராமநாதபுரம் ரோட்டில் வசிப்பவர் பச்சையப்பன்  (55). இவரது சொந்த ஊர் தேனி.  இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையராக பணிபுரிகிறார். 

மதுரை எல்லீஸ் நகரில் இவரது அலுவலகம் உள்ளது. இவரின் நிர்வாகத்தின் கீழ் மதுரை, விருதுநகர் உட்பட தென்மாவட்டத்தின் பல்வேறு கோயில்கள் நிர்வாக  அலுவலர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில்,  விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்  கடந்த 28ம் தேதி உண்டியல் எண்ணும் பணி   இணை ஆணையர் பச்சையப்பன் தலைமையில் நடந்தது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அனிதா உட்பட பணியாளர்கள், தனியார் ஊழியர்கள்  பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணி முடிவதற்கு இரவாகிவிட்டது.

இதையடுத்து மலையில் இருந்து தரைப்பகுதிக்கு இறங்கு முடியாத சூழலில் அதிகாரிகள், பணியாளர்கள்  கோயில் பகுதியிலுள்ள கட்டிடத்தில் தங்கினர்.

இதற்கிடையில் அடுத்த நாள் காலையில் உதவி ஆணையர் அனிதா பாத்ரூம் சென்றபோது, அவரை பச்சையப்பன்  பின்தொடர்ந்து தனது செல்போனிலும், பேனாவிலுள்ள நுண்ணிய கேமரா மூலமும் படமெடுத்துள்ளார். இதை அறிந்து  அனிதா அதிர்ச்சி அடைந்தார்.  

அவர் நேற்று சாப்டூர் காவல் நிலையத்தில் இணை ஆணையருக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில்,  டிஎஸ்பி  மதியழகன், காவல் ஆய்வாளர்  செல்வக்குமாரி விசாரித்தனர். ஐடி சட்டப்பிரிவின் கீழ்  அவர் மீது வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in