

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை ஓரிரு நாளில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவில் உள்ள இரு அணிகளை இணைக்கும் முயற் சியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். இதையடுத்து, இணைப்பு பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், ஓபிஎஸ் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஓரிரு நாளில் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என இரு அணி வட்டாரங்களும் தெரி விக்கின்றன.
இது தொடர்பாக நேற்று முன் தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியை வழிநடத்த ஒரு குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படு கிறது. எக்காரணத்தை முன் னிட்டும் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என அமைச்சர்கள் பலர் தெரிவித்துள் ளனர்.
3-வது நாளாக ஆலோசனை
அதேபோல, ஓபிஎஸ் தரப்பிலும் இணைப்பு பேச்சு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வரு கிறது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் 3-வது நாளாக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கே.பி.முனுசாமி, கே.பாண்டி யராஜன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், வி.மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிர பாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சசிகலா குடும்பத்தினர் அனை வரையும் அதிமுகவில் இருந்து முற்றிலும் வெளியேற்ற வேண் டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை மீண்டும் வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் அல்லது கட்சியை வழிநடத்த அவரது தலைமையில் குழு அமைக்க வேண்டும். அதன்பிறகு முதல்வர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என பேச்சு வார்த்தையின்போது வலியுறுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கருத்து தெரி வித்ததாக ஓபிஎஸ் அணி நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
முதல்வர் அல்லது பொதுச் செயலாளர் பதவி கிடைத்தால் மட்டுமே இணைய வேண்டும். சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கும்போது இணைந்தால் மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழக்க நேரிடும் என்றும் ஓபிஎஸ்ஸிடம் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு நிற்பதால் ஆட்சியை இழக்க நேரிடும். இரட்டை இலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் பெரும் தோல்வி ஏற்படும். எனவே, இரு அணிகளும் இணைய வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.