விவசாயிகள் கடன் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

விவசாயிகள் கடன் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை பாரபட்சமின்றி ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வழக்கு பின்னணி:

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து கடந்த 2016 ஜூன் 28-ல் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை சட்ட விரோதமானது என்றும் அதை ரத்து செய்து விட்டு, பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

"தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in