5 மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு: வழக்கு செலவாக ரூ.20 லட்சத்தை வழங்கியது தமிழக அரசு

5 மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு: வழக்கு செலவாக ரூ.20 லட்சத்தை வழங்கியது தமிழக அரசு
Updated on
2 min read

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும், அதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத் தில் நாளை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கின்றனர். இந்த வழக்கு செலவுக்காக தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 மீனவர்களையும் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தியதாக அவர்கள் மீது பொய்யாக வழக்கு போடப்பட்டது. அவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக் கைகளை எடுக்குமாறு ராமேசுவரம் பகுதி மீனவர்கள், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்த ஜெயலலிதா, மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்காக இலங்கை யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கவும் வழக்கு செலவுக்காகவும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதையடுத்து, 2012 ஜூன் 11-ம் தேதி, மேல்முறையீட்டு மனுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, மீனவர்களின் குடும்பத்தினர் போதிய வருமான மின்றி, வறுமையில் துன்பப்படு வதைக் கண்ட ஜெயலலிதா, அவர் களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க உத்தரவிட்டார்.

மேலும், 5 மீனவர்களின் குடும்பங் களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை 2012-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஜெயலலிதா வழங்கினார். மேலும், மேல்முறை யீட்டு வழக்கை தொய்வின்றி நடத்த கூடுதல் நிதியாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது.

எனினும், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த அதிர்ச்சி செய்தியை அறிந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அன்றே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் வகையில் உரிய சட்ட உதவிகளை வழங்க இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டுள்ளது. தீர்ப்பு சிங்கள மொழியில் உள்ளதால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, 5 அப்பாவி மீனவர்களை விடுதலை செய்ய 10-ம் தேதி (நாளை) இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேல் முறையீட்டு வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள், இலங்கை யில் உள்ள இந்திய தூதரகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேல்முறையீடு செய்வதற்கான மொத்த செலவாக ரூ.20 லட்சம், முதல்வர் உத்தரவின்படி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இன்று (சனிக் கிழமை) அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in