பயிற்சி மருத்துவர்களுடன் மோதல் விவகாரம்: நோயாளிகளின் உறவினர்கள் 5 பேர் கைது
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் (24). மேல்மருவத் தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கிறார். தலையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கடந்த 14-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் அவரைப் பார்க்க உறவினர்கள் 20 பேர் வந்துள்ளனர். அப்போது, பயிற்சி மருத்துவர்கள், விஜய்யின் உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பயிற்சி மருத்துவர்கள், மேற்படிப்பு மாணவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்குதல் நடத்திய விஜய்யின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்ட வாறு மருத்துவமனை எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி நோயாளிகளின் உறவினர்கள் பொது மருத்துவமனை வளாகத் துக்குள் பயிற்சி மருத்துவர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், செய்தி சேகரிக்கச் சென்ற தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பத்திரிகையாளர் களும் பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போலீ ஸார் மற்றும் டீன் நாராயணசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
தாங்கள் தாக்கப்பட்டது குறித்து பயிற்சி மாணவர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய தாக விஜய்யின் உறவினர்களான திருநெல்வேலியை சேர்ந்த சகோதரர்கள் பாலகிருஷ்ணன் (35), திலீப் குமார் (29), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த லதா (43), நிஷா (34), பத்மபிரியா (27) ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அனைவரையும் நேற்று கைது செய்தனர்.
