

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 6 பேரிடம் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு விமானம் நேற்று அதிகாலையில் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் வெளிநாட்டு கரன்சி கடத்தப்படுவதாக முன்கூட்டியே கிடைத்த தகவலின்படி மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த சென்னையைச் சேர்ந்த ஜியாவுதீன், நடராஜன், சாகிப் உட்பட 6 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனை செய்தபின், அவர்கள் வைத்திருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அமெரிக்க டாலர், யுரோ உட்பட வெளிநாட்டு கரன்சி கட்டுகள் சுமார் ரூ.1 கோடி (இந்திய மதிப்பு) அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் இருந்து பணம் பறி முதல் செய்யப்பட்டது. அதன்பின் அவர்களின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.