பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: ஜி.ராமகிருஷ்ணன்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: ஜி.ராமகிருஷ்ணன்
Updated on
1 min read

பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை உயர்த்திட ஆந்திர அரசு எடுக்கும் முயற்சி மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திரா - தமிழகம் எல்லை அருகே சித்தூர் மாவட்டம், பெரும்பள்ளம் கிராமப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்த ஆந்திர நீர்ப்பாசனத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆந்திர அரசின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகளில் ஒன்று பாலாறு. இந்த ஆறுகளில் கீழ்நிலையில் உள்ள மாநிலங்களைக் கேட்காமல், மேல்நிலையில் உள்ள மாநிலம் ஆற்றின் திசையை திருப்புதல், தண்ணீர் தேக்குதல், தடுப்பணை கட்டுதல் போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இந்நிலையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இப்பிரச்சினையில் ஏற்கனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இப்பின்னணியில் ஆந்திர அரசு தடுப்பணையின் உயரத்தை உயர்த்திட எடுக்கும் முயற்சி மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

பாலாற்றின் மூலம் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தற்போது தடுப்பணையை உயர்த்திக் கட்டினால் பாசன நீர் வரத்து முற்றிலுமாக குறைந்து பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இப்பிரச்சனையில் தமிழக அரசு, ஆந்திரா மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஆந்திர அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்திட சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், மத்திய அரசும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு ஆந்திர அரசின் இந்த முடிவை கைவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in