

திருச்சி கே.டி திரையரங்கம் எதிரே சாஸ்திரி சாலை சந்திப்பில் தேமுதிகவினர் அமைத்த பேனரை திமுகவைச் சேர்ந்த சூர்யா உள்ளிட்ட சிலர் கிழித்ததாகவும் அதை தட்டிக்கேட்கச் சென்ற தேமுதிகவின் தில்லை நகர் பகுதிச் செயலாளரான கண்ணன் என்பவரைப் பலமாகத் தாக்கியதாகவும் தில்லை நகர் காவல்நிலையத்தில் சனிக்கிழமை கண்ணன் என்பவர் புகார் அளித்தார்.
5 பிரிவுகளில் வழக்கு…
இந்தப் புகாரைத் தொடர்ந்து தில்லை நகர் காவல்நிலைய ஆய்வாளர் மலைச்சாமி வழக்குப்பதிந்து சூர்யா(22), மோகன் அடையாளம் தெரியாத மேலும் சிலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான சூர்யா திருச்சி சிவாவின் ஒரே மகன்.
தலைமறைவு
போலீஸார் அவர் மீது ஜாமீனில் வர முடியாத கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
திருச்சி சிவாவின் மகன் மீது சில மாதங்களுக்கு முன்பு சங்கம் ஹோட்டலில் ரகளை செய்ததன் காரணமாக ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.