

திருவாரூர் அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, போன் வெடித்துச் சிதறி யதால் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
அரியலூர் மாவட்டம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சச்சின்(28). இவர், திருவாரூர் அருகே புள்ளமங்கலம் கிராமத்தில் உள்ள உறவினர் குண சேகரன் என்பவரின் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
திருவாரூர் அருகே முகந்தனூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது உயர் ரக செல்போனில் உறவினரைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்துச் சிதறியது. இதில், சச்சினின் முகம், தாடை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.