

தாராபுரத்தில் நேற்று ஒரே நாளில் 5 இடங்களில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திறப்பு விழாவை முன்னிட்டு பிரியாணி, தண்ணீர் பாக்கெட் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. அவற்றை வேறு பகுதிகளுக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பை மீறி தாராபுரம் - பொள்ளாச்சி சாலை யில் சின்னக்காம்பாளையம் பிரிவு, கவுண்டச்சிபுதூர் உட்பட 5 பகுதி களில் ஒரே நாளில் 5 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கடைகளை ஒட்டியே பார்களும் அடுத்தடுத்து திறக்கப்பட்டுள்ளன. நேற்று மது அருந்த வந்தவர் களுக்கு பிரியாணியும், தண்ணீர் பாக்கெட்டும் இலவசமாக விநியோ கிக்கப்பட்டன. அதனால் மேற்கண்ட டாஸ்மாக் கடைகளில் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்ற னர்.
ஒரு வாரம் இலவசம்
இதுகுறித்து பார் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, ‘உச்சநீதி மன்ற உத்தரவால் பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது புதிதாக கடைகள் திறக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தினசரி பிரியாணி, தண்ணீர் பாக்கெட்டை இலவசமாக விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.