

அழகிரியின் உருவ பொம்மையை யாரும் எரிக்கக் கூடாது என்று திமுகவினருக்கு கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா, கருணாநிதி மற்றும் ஏராளமான முன்னோடிகள் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில், ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக பெரிதும் வருந்துகிறேன். தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த உருக்கமான பேட்டிக்குப் பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் சிலர் அண்ணன் அழகிரியின் உருவபொம்மையை எரித்ததாக ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் பார்த்து வேதனைப்படுகிறேன்.
அரசியல் நாகரிகத்தைச் சவாலுக்கு அழைக்கும் இப்படிப்பட்ட செயலை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. இது காலம்காலமாக நம் கட்சியில் கண்ணும் கருத்துமாகப் பேணப்பட்டு வரும் கட்டுப்பாட்டையும் பண்பாட்டையும் முறியடிக்கின்ற காரியமாகும். தலைவரும் பொதுச் செயலாளரும் ஆழ்ந்து சிந்தித்து, முறைப்படி நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில், ஆர்வம்மிக்க ஒரு சில தொண்டர்கள் ஆத்திரத்திலும் அவசரத்திலும் ஈடுபடும் இத்தகைய செயல்பாடுகள் இயக்கத்தின் கட்டுக்கோப்பைப் பாதிக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவர் என்னைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு, தலைவர் எந்த அளவுக்கு மனக் காயம் அடைந்திருக்கிறாரோ, அதைப்போல அவரைப் பற்றி நான் கூறியிருந்தாலும், அதே அளவுக்கு வேதனையைத்தான் அனுபவித்திருப்பார். அதைத்தான் அவரது பேட்டியில், இருவரும் என் மகன்கள் என்பதைவிட இருவரும் கழக உறுப்பினர்கள் என்று தெரிவித்தார்கள்.
தலைவருக்கு எல்லாவற்றையும்விட கட்சியே முதன்மையானது, உயர்ந்தது என்பதை அனைவரும் உணர வேண்டும். அழகிரி என்னைப் பற்றிக் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும். தலைவர் அந்தச் செய்தியை, எதார்த்தமாக வெளிப்படுத்தியதே போதும்.
எனவே, கட்சியினர் இந்தப் பிரச்சினையை மேலும் ஊதிப் பெரிதாக்குகின்ற வகையில், அவருடைய உருவ பொம்மையை தாக்குகின்ற செயலிலோ, எரிக்கின்ற செயலிலோ, சுவரொட்டி ஒட்டுகின்ற செயலிலோ ஈடுபட்டால், அதுவும் கட்சியின் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகி விடும்.
உணர்ச்சிப் பெருக்கால் செய்யப்படும் காரியங்கள், பத்திரிகைகள் நம்மைப் பற்றித் தாறுமாறாக எழுதுவதற்கு உணவாகி விடும் என்பதோடு பொதுமக்களுக்கு நம்மீது வெறுப்புணர்வு தோன்றவும் காரணமாகி விடும். எனவே, இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டுவிட்டு, அடுத்து நாம் சந்திக்கவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், திருச்சியில் நடக்கவுள்ள பத்தாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துதல் போன்ற ஆக்கப்பூர்வ பணிகளில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.