வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை, ஒருசில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால், வெள்ளிக்கிழமை உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. எந்த மாற்றமும் அடையவில்லை. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூரில் 9 செ.மீ, சிவகங்கையில் 8 செ.மீ, திருபுவனம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் முத்துபேட்டையில் 4 செ.மீ, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, சிதம்பரத்தில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in