

சென்னை காசிமேடு சிங்கார வேலர் நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மகாலட்சுமி (20). இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கிருந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டதாக ஸ்டான்லி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையின்போது மகாலட்சுமி சந்தேகப்படும் விதத்தில் பதில் கூறியதால், அவரை வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் குழந்தை கடத்தலே ஒரு நாடகம் என்பது தெரியவர போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தண்டையார்பேட் டையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மகாலட்சுமி வீட்டின் அருகில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். முத்துகிருஷ்ணனின் உறவினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த தகவலை முத்துகிருஷ்ணனிடம் கூறி குழந்தை வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
குழந்தையை விற்குமாறு அவரிடம் முத்துகிருஷ்ணன் தந்திரமாக பேசியுள்ளார். முதலில் மறுத்த அவர், பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார். குழந்தையை கொடுக்க ரூ.1 லட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.
இதையடுத்து கணவருக்கு தெரியாமல் குழந்தையை விற்க மகாலட்சுமி முடிவு செய்தார். திட்டமிட்டபடி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என நடித்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளார். அங்கிருந்த முத்துகிருஷ்ணனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு குழந்தையை கொடுத்துள்ளார். வீட்டுக்கு சென்றால் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்பார்களே என்ற பயத்தில் குழந்தை காணவில்லை என புகார் கொடுத்து நடித்துள்ளார்.
குழந்தையை உடனே ரயில் மூலம் ஐதராபாத் கொண்டு சென்றுவிட்டனர். குழந்தை கடத்தல் நாடகம் ஆடிய மகாலட்சுமி, அதற்கு உடந்தையாக இருந்த முத்துகிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.