

சுடுகாட்டுக்கு வழி இல்லாததால் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து சடலத்தை எடுத்துச் செல்லும் அவலத்துக்கு ஆளாகியுள்ளனர் மணலூர் கிராம மக்கள்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உடையானந்தல் ஊராட்சிக்குட் பட்டது மணலூர் கிராமம். இங்கு 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமம் ஒரு புறம் கெடிலம் ஆறும், மறுபுறம் நரியன் ஓடையாலும் சூழ்ந்துள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கால் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். தற்போது நரியன் ஓடையில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளதால் அந்த நிலை மாறியிருக்கிறது. கிராமத்துக்கென சுடுகாடு இல்லாததால் இறந்தவர் களை அடக்கம் செய்ய முடியாமல் தவிக் கின்றனர். சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு சடலத்தை சுமந்து சென்று கெடிலம் ஆற்றில் அடக்கம் செய்கின்றனர். அங்கு செல்வதற்கும் பாதை வசதி இல்லை. இதனால் சடலத்துடன் கரும்பு தோட்டத்தில் புகுந்தும் நெல், உளுந்து வயல்களைக் கடந்தும் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பயிர்களும் சேதமடைவதுடன் நிலத்தின் உரிமையாளரின் கோபத் துக்கும் ஆளாக நேரிடுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை அக்கிராமத் தைச் சேர்ந்த எத்திராஜ் (62) உடல் நலக்குறைவால் இறந்தார். உடலை வழக்கமான முறையில் வயல்வெளியிலும் கரும்பு தோட்டத்திலும் புகுந்து எடுத்துச் சென்று கெடிலம் ஆற்றில் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்தவர்களை நல்லவிதமாக அடக்கம் செய்யக்கூட வழியில் லையே என ஆதங்கப்படுகின்றனர் கிராம மக்கள். இந்த அவலத்தைப் போக்க சுடுகாட்டுக்கு பாதை அமைக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.