

ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்தைப் படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானு ஜர் என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி என்.கோபாலசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீராமானுஜரின் கோட்பாடுகள், கருத்துகளை மக்களுக்கு பல வழிகளிலும் கொண்டு சேர்த்தவர்கள் சிலரை மேடையில் கவுரவம் செய்த பிறகு அமைச்சர் பேசியதாவது:
சமூக நல்லிணக்கத்தையும், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தையும் படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானு ஜர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது புகழ் நிலைத்திருக்க அவரது சேவை மனப்பான்மையே காரணம். ஸ்ரீராமானுஜரின் ஜெயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாடுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த ஆயிரமாவது ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் வாயிலாக அவரது கருத்துகளை நாடு முழுவதும் பரப்ப நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீராமா னுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு தலைவர் ஏ.வி.ரங்காச்சாரி, ஆர்எஸ்எஸ் அகில பாரத துணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால்ஜி உள்ளிட்டோர் பேசினர்.