

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையில் பயனடைந்த குழந்தைகளுடன் இந்திய மாண்டிசொரி மையத்தின் தலைவர் உமா சங்கர், ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக்கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங் உள்ளிட்டோர்.
சென்னை: சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில், சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை 3 வயதில் செய்து கொண்ட, முதுகலை பட்டப் படிப்பு படித்து வரும் கல்யாணி கார்த்திக் விழாவில் பங்கேற்று பரதநாட்டிய நடனம் ஆடினார்.
விழாவை தொடங்கி வைத்து, காக்ளியர் கருவி பொருத்திய குழந்தைகளின் பெற்றோருக்கான வழிகாட்டு முறை கையேட்டை வெளியிட்ட இந்திய மாண்டிசோரி மையத்தின் தலைவர் உமா சங்கர் பேசுகையில், “கேட்கும் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில், உரிய முறையில் சிகிச்சை அளிக்கும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், கேட்பியல் மற்றும் பேச்சு மொழித்துறை பயிற்சி நிபுணர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்பு சேவைகள் பாராட்டத்தக்கது.
குழந்தைகளின் மீது வெளிப்புற கருத்துக்களை திணிப்பதைவிட, அவர்கள் தங்களுக்கே உரிய கற்றல் பாதையில் முன்னேற வழிகாட்டுதல் மிக முக்கியம் ஆகும்” என்றார். ராமச்சந்திராவில் காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சையில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இக்குழந்தைகளில் பலர் தங்கள் குறைபாடுகளில் இருந்து மீண்டு சாதாரண குழந்தைகளை போல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ராமச்சந்திரா, காக்ளியர் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் பல கிராமப்புறங்களில் ஏற்பாடு செய்து பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளின் மறுவாழ்வுக்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கி வருகிறது.
இந்த விழாவில் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக்கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங், மருத்துவ இயக்குநர் மருத்துவர் ஆர்.பி.சுதாகர் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி. சுரேந்திரன், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் எஸ்.பிரசன்ன குமார், கேட்பியல் மற்றும் பேச்சு மொழித் துறை முதல்வர் மருத்துவர் பிரகாஷ் பூமிநாதன், சிறப்பு அலுவலர் ரூபா நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.