

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் முடிவுக்கு, மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவருமான ஜி.கே.வாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
மேலும், "என்னைப் பொருத்தவரையில், இதுபோன்ற கொள்கை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்" என்றார்.
அத்துடன், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, இந்தியாவில் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கும் முடிவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மின் தட்டுப்பாடு: முதல்வர் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
தமிழக மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிற்கு சொந்தமான பொது நிறுவனங்களில் தொடர்ந்து மின் உற்பத்தி குறைந்திருப்பது தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க திட்டமிட்ட சதியோ என்று மக்கள் சந்தேகம் கொள்ள நேரிடும் என்று சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
அத்துடன், ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டுக்கு திமுக மற்றும் மத்திய அரசின் கூட்டுச் சதியே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்று கூறினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாக்கும் பிரச்சினை குறித்து அவர் கூறும்போது, இப்பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டடத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.