தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை அமைச்சர் டெல்லி வருகை

தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை அமைச்சர் டெல்லி வருகை
Updated on
1 min read

தமிழக-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய அரசின் அழைப்பை ஏற்று, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா இம்மாத இறுதியில் டெல்லிக்கு வருகை தர உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நான்காம் கட்ட மீனவப் பேச்சுவார்த்தைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழகம்-புதுச்சேரியை சார்ந்த 13 மீனவப் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் இடையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சரை மத்திய அரசு சார்பாக டெல்லிக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக புதன்கிழமை மாலை கொழும்பில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவைச் சார்ந்த வட மாகாண மீனவப் பிரநிதிகளுடன் நான்காம் கட்ட இலங்கை-தமிழக மீனவப் பேச்சுவார்த்தை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மகிந்த அமரவீர கூறியதாவது,

''இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் தடை செய்யப்பட்ட விசைப்படகுகளினால் இலங்கையின் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருவதுடன் வட மகாண மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வடமாகாண மீனவப் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவும், இரு நாட்டு மீனவ பேச்சு வார்த்தையை தொடர வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் மாத இறுதியில் டெல்லி செல்ல உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in