

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது உள்பட ஒன்பது பேருக்கு தலைவர்களின் பெயரிலான விருதுகள் வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும் தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதுகளைப் பெற்றிடத் தகுதியான பெருமக்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன் விவரம்:
திருவள்ளுவர் விருது - கவிஞர் யூசி (தைவான்), தந்தை பெரியார் விருது - சுலோச்சனா சம்பத், அண்ணல் அம்பேத்கர் விருது - பேராயர் முனைவர் எம்.பிரகாஷ், பேரறிஞர் அண்ணா விருது - பண்ருட்டி ச.ராமச்சந்திரன், பெருந்தலைவர் காமராஜர் விருது - கி.அய்யாறு வாண்டையார், மகாகவி பாரதியார் விருது - முனைவர் கு.ஞானசம்பந்தன், பாவேந்தர் பாரதிதாசன் விருது - முனைவர் ராதா செல்லப்பன், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - அசோகமித்ரன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் புதன்கிழமை நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதுகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும்.
மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி வழங்குவதற்கான அரசாணைகளும் இந்த விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.