

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொல்கத்தாவை தலைமையிட மாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட்பண்ட் நிறுவனமும், ஜி.என்.என்.பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனமும் இணைந்து பாசிட்டிவ் என்ற ஒரு டிவி சேனலை வாங்குவது தொடர்பாக கடந்த 2010-ல் ஒப்பந்தம் செய்தன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், ஜி.என்.என். நிறுவனம் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் ஆஜரானார். இதற்காக அவருக்கு வழக்கறிஞர் கட்டணமாக ரூ.1 கோடியை சாரதா சிட்பண்ட் நிறுவனம் வழங்கியது.
இந்நிலையில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. நளினி சிதம்பரத் துக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், அதற்காக வரும் செப்டம்பர் 23-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறி நளினி சிதம்பரத்துக்கு கொல்கத்தா அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 7-ல் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நேற்று பிறப்பித்த உத்தரவில், “நளினி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 8 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதுபோல இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அந்த பதில் மனுவுக்கு மனுதாரர் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 8-க்கு தள்ளி வைத்தார். அதுவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நளினி சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என நீதிபதி தடை விதித்தார்.