மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக வேண்டும்: மனக்கசப்புகள் குறித்து மனம் திறக்கும் வீணை காயத்ரி

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக வேண்டும்: மனக்கசப்புகள் குறித்து மனம் திறக்கும் வீணை காயத்ரி
Updated on
2 min read

அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட பல தரப் பினரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீணை காயத்ரியும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார். அரசியல் அரங்கம் எதிலும் தலைகாட்டாத அவர் இப்போது ஓபிஎஸ் இல்லத்துக்கே வந்து ஆதரவு தெரிவித்தது ஏன்? அவரே மனம் திறக்கிறார்.

அதிமுக ஆட்சியில் இல்லாத போது, மறைந்த முதல்வர் ஜெய லலிதாவை போயஸ் தோட்டத்தில் 2 முறை சந்தித்துள்ளேன். 2011-ல் முதல்வரான பிறகு, அவரே என்னை அழைத்து அரசு இசைக் கல்லூரிகளின் இயக்குநர் பதவியை அளித்தார். என் கோரிக்கையை ஏற்று 2013-ல் இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, அதன் துணைவேந்தராகவும் என்னை நியமித்தார்.

முதல்வர்தான் வேந்தர் என்பதால், பல்கலைக்கழகம் சிறப்பாக வளரும் என நம்பினேன். என் நினைப்புக்கு மாறாகவே எல்லாம் நடந்தது.

துணைவேந்தரான பிறகு, பல் கலைக்கழக வளர்ச்சிக்காக முதல் வரின் தனிச் செயலராக இருந்த ராமமோகன ராவை சந்திக்க நேரிட்டது. பல்கலைக்கழகம் வந் ததையே விரும்பாத அவர், என்னைச் சந்திப்பதையும் தவிர்த்தார்.

பல்கலையின் சிண்டிகேட் உறுப் பினர்கள் பதவிக்கு நான் பரிந்துரைத்த 6 பேரை தேர்வு செய்யாமல், வேறு 6 பேரை பட்டியலில் சேர்த்தனர். ‘இப்பதவியில் பொம்மையாக இருக்க விரும்பவில்லை. நான் சிறுமைப்படுத்தப்படுவதை அம்மா விடம் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கூறினேன். அவர் என்னை சமாதானம் செய்து, நான் சிபாரிசு செய்தவர்களை பட்டியலில் சேர்த்தார். அப்படியும், துறைச் செயலரிடம் இருந்து அதற்கான ஒப்புதல் வரவில்லை.

திட்டமிட்ட சதிகள்

ஜெயலலிதாவே ஆரம்பித்து, அவரே வேந்தராக இருக்கும் பல் கலைக்கழகத்தின் வளர்ச்சியை அதிகாரிகள் திட்டமிட்டே தடுக் கிறார்கள் என்பது தாமதமாகத்தான் எனக்கு தெரியவந்தது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்குக்கூட வேந்த ரான ஜெயலலிதாவைச் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை.

இந்த சதிகள் பற்றி ஜெயலலிதா விடம் சொல்லவும் முடியாமல் நான் தவித்தபோது, எனக்கு வந்த கொலைமிரட்டல் தொடர்பாக விசா ரிக்க 2016 ஜூலையில் என்னை அழைத்தார் ஜெயலலிதா. அன்று அதிகாலையில் என்னை தொடர்பு கொண்ட கலை பண்பாட்டுத் துறை உயரதிகாரி, ‘முதல்வரிடம் என்ன கூறப்போகிறீர்கள்? என்று தலைமைச் செயலாளர் கேட்கிறார்’ என்றார். அப்போது ராமமோகன ராவ்தான் தலைமைச் செயலாளர். ‘அதை அவருக்குச் சொல்ல அவசியம் இல்லை’ என்றேன். மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரித்தார். ‘பணிகளைச் செய்யவிடாமல், இந்த வேலையை விட்டே ஓடும் அள வுக்கு எப்படி எல்லாம் எனக்கு டார்ச்சர் தரப்படுகிறது என்பதை சொல்லப்போகிறேன்’ என்றேன்.

3 ஆண்டுகள் நீட்டிப்பு

தலைமைச் செயலகத்தில் முதல் வரை சந்திக்கச் சென்றபோது, ராம மோகன ராவ் உள்ளிட்டவர்களும் அங்கு இருந்ததால், முதல்வரிடம் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. ‘தனி ஆளாக போராடுகிறேன். அது பற்றி உங்களிடம் நிறைய பேசவேண் டும்’ என்று மட்டும் சொன்னேன். என் நிலையைப் புரிந்துகொண்ட முதல்வர், இனிமேல் நுண்கலைப் பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை சாந்தா ஷீலா நாயர், ஜெய முரளீ தரன் கவனிப்பார்கள் என்றார். என் பத விக் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பதாகவும் சொன்னார்.

இது எனக்கு பெரிய சந்தோஷத் தைக் கொடுக்கவில்லை. முதல்வர் என்ன உத்தரவிட்டாலும், வெளியில் அதை செயல்படுத்தும் நிலையில் அதிகாரிகள் இல்லை என்பதே அதற்கு காரணம். இந்த சந்திப்புக்குப் பிறகு சில வாரங்கள் பல்கலைக்கழக கோப்பு கள் வேகமாக நகர்ந்தன. முதல் வர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதும் மீண்டும் கிடப்பில் போட்டார்கள்.

ராமமோகன ராவின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது, என் கண்ணுக்குதான் தெரியாதே தவிர, மனதுக்கு நன்றாக தெரியும். மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் நான் தெரிந்துகொண்டது இதுதான்.. ஜெயலலிதாவிடம் நல்லவர் போல நாடகம் போட்ட எல்லோருமே வெளியில் அவரது எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்.

உண்மை விசுவாசி

எனக்குத் தெரிந்தவரை, ஜெய லலிதாவின் உண்மையான விசுவாசி ஓபிஎஸ்தான். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, எங்கள் பல்கலைக்கழக விழாவில் வேந்தர் என்ற முறை யில் கலந்துகொண்ட முதல்வர் ஓபிஎஸ்-க்கு கேடயம் வழங்கினோம். ‘அம்மா சொன்னதாலதான் முதல்வர் பதவியில் இருக்கிறேன். இதெல்லாம் அம்மாவுக்குத்தான் தரணும்’ என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அதே விசுவாசத்துடன் கடைசி வரை இருந்தார். அவருக்கு அருகில் நிற்கும்போது ஜெயலலிதாவுடன் இருக்கிற உணர்வு ஏற்படுகிறது. ஜெயலலிதாவின் எண்ணங்கள் செயல்வடிவம் பெற வேண்டுமானால், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓபிஎஸ்தான் முதல் வராக வேண்டும். இதன் அடிப் படையில்தான் அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்தேன்.

இவ்வாறு வீணை காயத்ரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in