Published : 06 Apr 2016 10:13 AM
Last Updated : 06 Apr 2016 10:13 AM

அரசியல் அப்டேட்ஸ் 10 - திமுகவுடன் அணி சேரும் நீக்கப்பட்ட தேமுதிக நிர்வாகிகள்?

தேமுதிகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் திமுகவுடன் அணி சேர்ந்து தேர்தல் களம் காணும் சூழல் நிலவுகிறது. இது தொடர்பான அரசியல் அப்டேட்ஸ் 10 தகவல்கள்:

* தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. அனைத்து பிரதான கட்சிகளிலும் ஏறக்குறைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவில் நேற்று திடீர் பூகம்பம் வெடித்தது. மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவின் 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.

* தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்), சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், மற்றும் துணைச் செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.விஸ்வ நாதன் (வேலூர் மத்தி), என்.கார்த் திகேயன் (திருவண்ணாமலை), செஞ்சி சிவா (விழுப்புரம்), இமயம் என்.எல்.சிவக்குமார் (ஈரோடு தெற்கு மாநகர்), பி.செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) ஆகிய 10 பேரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர்.

* செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சந்திரகுமார், "பெரும்பாலான தேமுதிகவினரின் மனநிலைக்கு எதிரான முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி சேருவது தற்கொலைக்கு சமம். எனவே, தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொண்டு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும்." என்றார். | முழு விவரம் > >ம.ந.கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலக வேண்டும்: சந்திரகுமார் தலைமையில் தேமுதிகவினர் போர்க்கொடி

* விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், தங்கள் கோரிக்கைகள் குறித்து புதன்கிழமை (இன்று) மதியத்துக்குள் விஜயகாந்த் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் அடுத்தகட்ட முடிவு பற்றி அறிவிப்போம் என்று அதிருப்தியாளர்கள் கெடு விதித்தனர். தேமுதிகவில் இப்படி திடீர் போர்க்கொடி தூக்கப்பட்டது, அக்கட்சி மற்றும் மக்கள் நலக் கூட்டணி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* செய்தியாளர் கூட்டம் நடத்திய அடுத்த சில மணி நேரங்களில், தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தேமுதிகவின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 10 பேரும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது. | முழு விவரம் > > தேமுதிகவில் இருந்து சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகள் நீக்கம்: அதிருப்தியாளர்கள் மீது விஜயகாந்த் அதிரடி

* தேமுதிகவில் நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டப் பொறுப்பாளர்களும் உடனடியாக நியமிக்கப்பட்டனர். ஏ.வி.ஆறுமுகம் (திருவள்ளூர் கிழக்கு), பாபு முருகவேல் (திருவண்ணாமலை வடக்கு), ஸ்ரீதர் (வேலூர் மத்தி), பி.ஆனந்தபாபு (சேலம் மேற்கு), பி.கே.சுப்பிரமணி (ஈரோடு வடக்கு), பா.கோபால் (ஈரோடு தெற்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* "தேமுதிகவில் இருந்து இவ்வாறு எங்களை நீக்குவதற்கு விஜயகாந்துக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று எஸ்.ஆர்.பார்த்திபன் கூறினார்.

திமுகவுடன் கூட்டணி?

* தேமுதிக அதிருப்தியாளர்கள் வட்டத்தில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘‘எங்கள் தியாகத்தை மறந்துவிட்டு விஜயகாந்த் சுயநல மாக முடிவு எடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணியில் இணையக் கூடாது என்று பலமுறை கூறினோம். இன்று (5-ம் தேதி) காலைகூட விஜயகாந்திடம் எடுத்துச் சொன் னோம். ‘‘இருக்கிறவர்கள் இருங்கள், பிடிக்காதவர்கள் கிளம்புங்கள்’’ என்று கோபமாக பேசினார். அதனால்தான் செய்தியாளர்களை சந்தித்தோம். அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பேசி வருகிறோம். கூட்டணி உறுதியானால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். இதுதொடர்பான அறிவிப்புகள் 6-ம் தேதி (இன்று) வெளியாகலாம்’’ என்றார்.

தேமுதிக அவசர கூட்டம்

* கட்சித் தலைமைக்கு எதிராக தேமுதிக நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ள பரபரப்பான சூழலில், தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (புதன்கிழமை) நடக்கவுள்ளது. தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் நடக்கவுள்ளது.

மேலும் சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கக் கூடும் என்ற தகவல் விஜயகாந்துக்கு சென்றதன் அடிப்படையில், இன்றைய அவசரக்கூட்டத்தை அவர் கூட்டியுள்ளதாக தெரிகிறது. | அதன் விவரம் > >விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அவரச ஆலோசனைக் கூட்டம்

திமுக சதி: மநகூ

தேமுதிகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய ம.ந. கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். | முழு விவரம் > > தேமுதிகவில் குழப்பம் ஏற்படுத்த திமுக சதி: ம.ந. கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x