

ஆளுநர் காலம் கடத்துவது ஜனநாயக சீரழிவுக்கு வழிவகுக்கும். ஆளுநர் காலம் கடத்துவது ஜனநாயக சீரழிவுக்கு வழிவகுக்கும். ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காபந்து அரசின் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் தன்னால் அதனை நிரூபிக்க முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தான் சட்ட மன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் சசிகலா உறுதிபடக் கூறுகின்றார். மிக காலதாமதாமாக சென்னை வந்த ஆளுநரை, இருவரும் சந்தித்துள்ளனர். ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது உள்நோக்கமுடையது.
தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் செத்துமடிந்து கொண்டிருக்கின்றனர். ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அரசு நிர்வாகம் முற்றிலும் செயல் இழந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பாஜக முயல்வதும், அதற்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதும், அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.
உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி, யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். அத்தகைய கடமையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது, ஜனநாயக சீரழிவுக்கு வழிவகுக்கும். ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது'' என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.