Published : 18 Feb 2014 11:17 AM
Last Updated : 18 Feb 2014 11:17 AM

முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்க: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது இந்திய நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகாய், நீதியரசர் சிவகீர்த்தி சிங் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்து வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் நிம்மதியையும் ஆறுதலையும் தந்துள்ள மகத்தான தீர்ப்பு ஆகும்.

மத்திய அரசு வழக்கறிஞர் இம்மூன்று தமிழர்களும் சிறைச்சாலையில் மகிழ்ச்சியாக இருப்பதாக முன்வைத்த அபத்தமான வாதத்தை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முற்றிலும் மறுத்துத் தெரிவித்த கருத்து யாதெனில், சிறைச்சாலையில் இந்த மூன்று தமிழர்களும் எவ்வளவு மனத்துன்பங்களுக்கு ஆளானார்கள் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் தெளிவாகக் கூறுகிறது.

இத்தனை ஆண்டுகள் அவர்களின் கருணை மனுக்கள் மீதான முடிவு எடுக்கப்படாமல் காலதாமதம் ஆனதற்கு எந்த விளக்கமும் காரணமும் இல்லை என்பதனால், இந்த மூன்று பேரின் மரண தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றுகிறோம்.

எனினும், குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையையும் மாநில அரசு குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

திருப்பெரும்புதூர் கொலைச் சம்பவத்தில் எள் அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான மூன்று தமிழர்களையும், உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

2011 ஆம் ஆண்டு இம்மூன்று தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டபோது, புகழ்மிக்க வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரிய வாதங்களை முன் வைத்ததால், தூக்குத் தண்டனைக்கு தடை ஆணை கிடைத்தது.

காங்கிரஸ் கட்சி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது, உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதால், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக ஒவ்வொரு வாய்தாவிலும் ராம்ஜெத் மலானி பங்கேற்று நிறைவாக அற்புதமான வாதங்களை எடுத்து வைத்தார். தமிழ்ச் சமுதாயம் ராம்ஜெத் மலானிக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கிறது". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x