மூத்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் உடல் நல்லடக்கம்

மூத்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் உடல் நல்லடக்கம்
Updated on
1 min read

நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் மா.அரங்கநாதன் (84) உடல்நலக் குறைவால் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மா.அரங்கநாதன் (84). சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வந்தவர், பிறகு புதுச்சேரியில் வசித்து வந்தார்.

தமிழ் இலக்கத்தியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்த மா.அரங்கநாதன் 'முன்றில்' இதழை நடத்தி வந்தார். 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தை 'முன்றில்' பெற்றது.

அரங்கநாதனின் படைப்புகளில் 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரைத் தொகுப்பும், 'வீடு பேறு', 'காடன் மலை', 'சிராப் பள்ளி', 'ஞானக் கூத்து' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், 'மா.அரங்கநாதன் கதைகள்', 'மா.அரங்கநாதன் கட்டுரைகள்', 'பறளியாற்று மாந்தர்', 'காளியூட்டு' ஆகிய நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. இவரது 86 சிறுகதைளை சாந்தி சிவராமன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அரங்கநாதனின் பல்வேறு படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக்கப்பட்டுள்ளன.

அரங்கநாதன் மகன் மகாதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், ஒட்டு மொத்த தொகுப்பாக மா. அரங்கநாதன் கதைகள், நேர்காணல்கள் என்ற பங்களிப்போடு தொடர்ந்து படைப்புலகில் ஆற்றலோடு இயங்கிவந்தவர் உடல்நலக் குறைவால் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in