

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறும்போது, “கருப்புப் பண மீட்பு விவகாரத்தில் பாஜக அரசு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் கருப்புப் பணத்தை மீட்போம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் கூறியபடி அப்பணத்தை மீட்டு பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மஜீத் மேமன் கூறும்போது, “கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், முழுமையான பட்டியல் வெளியாக காரணமாக இருந்தது உச்ச நீதிமன்றம்தான். தனது பொறுப்பை தட்டிக்கழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டு மக்களின் கடைசி நம்பிக் கையாக உச்சநீதிமன்றம் திகழ்கிறது” என்றார்.