

சென்னை: தமிழகத்தில் 1967, 77 தேர்தலைப்போல 2026 தேர்தலும் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. இதை, தவெக தலைவர் முன்பே கணித்து கூறியது குறிப்பிடத்தக்கது. தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், “1967, 1977 சட்டப்பேரவை தேர்தல்களைப் போல 2026 சட்டப்பேரவை தேர்தலும் தமிழகத்தில் புரட்சிக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார். இவர் கணித்தது போல், இன்றைய தமிழக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலின்போது, தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய சென்னை மாகாணம் மற்றும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழகம் உருவான பிறகும், தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்று வந்தது.
இதில், இந்தி திணிப்பு, குளக்கல்வி திட்டம் போன்ற தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து வந்த திமுக 1967 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடித்து, தொடர் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதன் பிறகு, இன்று வரை தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதனால், அந்த தேர்தல் திருப்புமுனை தந்த தேர்தலாகவும், புரட்சிக்கு வித்திட்ட தேர்தலாகவும் அமைந்தது.
திமுகவிலிருந்து வெளியேறிய எம்ஜிஆர், 1972-ல் அதிமுகவை தொடங்கினார். 1977-ல் முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்தித்தார். அப்போது, திமுக மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன.
இதையடுத்து, இந்த தேர்தலில் தொடர்ந்து இரு முறை வென்ற திமுக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு, எம்ஜிஆர் மறையும் வரை திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தொடர்ந்து 3 தேர்தல்களிலும் அதிமுகவே வென்று ஆட்சியை கைப்பற்றியது.
அதனால், 1977 தேர்தலும் திருப்புமுனை தந்த புரட்சி தேர்தலாக பார்க்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே விஜய், 2026 தேர்தலும் தமிழகத்தில் புரட்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்திருந்தார். அவர் கணித்தபடியே, இந்த தேர்தலில் திமுக, அதிமுகவை தவெக தோற்கடித்துள்ளது.
1967-ம் ஆண்டுக்கு பிறகு திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் ஆட்சியே நடைபெற்று வந்த நிலையில், அதற்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எப்போதும் இருமுறை தொடர்ந்து தோல்வியை சந்திக்காத அதிமுக, இந்த முறை 3-ம் இடத்துக்கு சென்றுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாது, இரு கட்சிகளிலும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் தொடர்ந்து போட்டியிட்டு வந்த மூத்த தலைவர்களின் வெற்றியை, தவெகவின் விசில் புரட்சி பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே, இது திருப்புமுனை தந்த, புரட்சிக்கு வழிவகுக்கும் தேர்தலாகவும் அமைந்துள்ளது. இதை முன்பே விஜய் கணித்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.