Published : 12 Nov 2013 07:29 PM
Last Updated : 12 Nov 2013 07:29 PM

தமிழர்களின் உணர்வுகளை மிதிக்கிறது மத்திய அரசு: ஜெயலலிதா

காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்க வழி வகுத்துள்ள மத்திய அரசின் முடிவு, தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா காட்டமாகப் பேசினார்.

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து பேசினார்.

அப்போது, "இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், போர்க் குற்றங்களை, இனப் படுகொலையை நடத்தியவர்கள் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்துவதோடு, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் தீர்மானம் என்னால் 8.6.2011 அன்று இந்த மாமன்றத்தில் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டை 'நட்பு நாடு' என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், 'தனி ஈழம்' குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய பேரரசை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் என்னால் 27.3.2013 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு நவம்பர் மாதம், இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும், காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் என்னால் 24.10.2013 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது தவிர, இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் 25.3.2013 அன்று பாரதப் பிரதமரை கடிதம் வாயிலாகக் கேட்டுக் கொண்டேன். இதனைத் தொடர்ந்து 17.10.2013 அன்று மீண்டும் ஒரு கடிதத்தை பாரதப் பிரதமருக்கு எழுதினேன்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வினை இந்தியப் பேரரசுக்கு தெரிவிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளில், இலங்கை அரசின் இனப் படுகொலை குறித்து மூன்று தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உணர்வுப் பூர்வமான இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை, அறிவுப் பூர்வமாக சிந்தித்து இந்தத் தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இவை உணர்ச்சிவயப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல. ஆனால், இதுநாள் வரை தமிழர்களுக்கு சாதகமான எந்தவொரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

மாறாக, தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அரசு கொழும்புவில் நடத்தும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் பாரதப் பிரதமருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1993 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற 10 காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாடுகளில், ஐந்து மாநாடுகளில் இந்தியாவின் சார்பில் பாரதப் பிரதமர் கலந்து கொள்ளாததை வைத்துப் பார்க்கும் போது, தற்போதைய மத்திய அரசின் முடிவு வழக்கமான ஒன்றாக இருக்கிறதே தவிர, தமிழர்களுக்கு ஆறுதல் தரக் கூடியதாகவோ, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாகவோ இல்லை.

மத்திய அரசின இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். இவ்வாறு, கலந்து கொள்வதன் மூலம், இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை மனிதநேயம் அற்ற செயலை இந்தியா ஏற்றுக் கொள்கிறது, அங்கீகரிக்கிறது, என்ற நிலை தான் உருவாகும்.

உச்சகட்டப் போர் முடிந்து, நான்கு ஆண்டுகள் கடந்துள்ள சூழ்நிலையில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரப்படவில்லை. இன்னமும், இலங்கை ராணுவம் அவர்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த

பகுதிகளில் சிங்களர்கள் வசிக்கின்றனர். இடம் பெயர்ந்த தமிழர்கள், இன்னமும் இடம் பெயர்ந்த தமிழர்களாகவே இருக்கக் கூடிய அவல நிலை அங்கு நிலவுகிறது. தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், இனப் படுகொலையை நிகழ்த்தியவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அதற்காக, எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது போர்க் குற்றம் நிகழ்த்தியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு சமம் ஆகும். இது மட்டுமல்லாமல், இந்தப் பங்கேற்பின் மூலம், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் பதவியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அதிபர் வகிக்கக் கூடிய நிலைக்கு ஆதரவு அளித்த அவப்பெயரையும் இந்தியா அடைந்துவிடும்.

காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்க வழி வகுத்துள்ள மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.

தமிழினத்தை அழிப்பதற்காக சிங்கள இனவாத அரசுக்கு ஆயுதம் அளித்து, பயிற்சி அளித்து பல துரோகங்களை இந்தியப் பேரரசு இது நாள் வரை செய்திருந்தாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் தேடும் வகையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை, தண்டிக்க வழிவகுக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளப் போவதில்லை என்ற திடமான, உறுதியான முடிவை இந்தியப் பேரரசு எடுக்கும் என்று உலகத் தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் இந்த மாமன்றமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், மத்திய அரசு மீண்டும் தமிழர்களை வஞ்சித்துவிட்டது. எனவே, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், கீழ்க்காணும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம் விவரம்:

'இலங்கை நாட்டில், நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும், வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தும் தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு முற்றிலும் முரணான வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு செல்கிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை, மனிதநேயம் அற்ற செயலை, இந்தியா ஏற்றுக் கொள்கிறது, அங்கீகரிக்கிறது என்ற நிலை தான் உருவாகும்.

இது மட்டுமல்லாமல், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக, அதாவது Chair-in-Office ஆக இலங்கை அதிபர் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்ற தீராப் பழிச் சொல் இந்தியாவிற்கு ஏற்படும். இப்படிப்பட்ட, தீராப் பழிச்சொல் இந்திய நாட்டிற்கு ஏற்படுவதை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.

எனவே, தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கை நாட்டில் 13.11.2013 அன்று நடைபெறவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான கூட்டத்திலோ, 15.11.2013 முதல் 17.11.2013 வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலோ பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.'

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை, இம்மாமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும், பேரவைத் தலைவர் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x