

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு திமுக, அதிமுகவில் வாய்ப்பளிக்கவில்லை எனவும், இதனால் தென்னிந்திய மகா ஜன சங்கம் சார்பில் 500 பேர் போட்டியிடுவர் எனவும் அச்சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நந்தகோபால் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்களை பெற்றுச்சென்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட நாங்கள் வாய்ப்புக் கோரியும், அனைத்துக் கட்சிகளும் எங்களை புறக்கணித்து வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு வாங்கியுள்ளோம். மேலும் சிலர் வாங்கவுள்ளனர்.
இவ்வாறு 500-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுவார்கள்.அதேநேரம் ஈரோடு மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர், எங்கள் சமுதாயம் என்பதால் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றனர்.
முன்னதாக வேட்புமனு பெறவந்தவர்களுக்கு அனுமதி மறுத்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.