வரலாறு காணாத வறட்சியில் கல்பாத்தி ஆறு: தென்மேற்குப் பருவமழை காப்பாற்றுமா?

வரலாறு காணாத வறட்சியில் கல்பாத்தி ஆறு: தென்மேற்குப் பருவமழை காப்பாற்றுமா?
Updated on
2 min read

‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று கேரளத்தில் புகழப்படும் கல்பாத்தி, வரலாறு காணாத வறட்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வற்றாத ஜீவநதியாய் விளங்கி, தற்போது காய்ந்து கிடக் கும் கல்பாத்தி ஆற்றை தென்மேற்குப் பருவமழை காப்பாற்றுமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பாலக்காட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஊராக இருந்தாலும், இங்கு 70 சதவீதம் பேர் தமிழ் பேசும் மக்கள்.

இந்தப் பகுதியில் பாயும் ஆற்றின் நதிக்கரையில், ஒரு மூதாட்டி வசித்துவந்தார். இவரது முன்னோர் மயிலாடுதுறையில் வசித்துவந்ததால், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில்போல, கல்பாத்தியிலும் சிவனுக்கு கோயில் கட்ட முடிவு செய்தார். பின்னர், காசிக்குச் சென்று பாணலிங்கம் ஒன்றை எடுத்து வந்து, கோயில் கட்டுவதற்காக, தனது சொத்துகளை அரசுக்கு எழுதி வைத்தார் அந்த மூதாட்டி. இதையொட்டி, மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு குடியேறினர்.

16-ம் நூற்றாண்டில் பாலக்காடு மாநிலத்தை ஆட்சி செய்த அரசர், இங்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனை பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டினார். காசியிலிருந்து பாணலிங்கம் எடுத்து வந்து, காசி விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டதால், கல்பாத்தி நதிக்கரையில் இறந்தவர் கள் நினைவாக ஈமச்சடங்குகள் செய்யப்பட்டன. அதனால் இந்த ஊரை காசியில் பாதி கல்பாத்தி என்று கூறுகின்றனர்.

இங்கு பாயும் நதியை கங்கைக்கு இணையாகக் கருது கின்றனர். இவ்வளவு பெருமை கொண்ட கல்பாத்தி ஆறு, மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி, மலம்புழா அணையை அடைந்து, பின்னர் கல்பாத்தி வழியே பயணித்து பாலக்காட்டில் பாரதப்புழாவில் கலக்கிறது.

மலம்புழா, வாளையாறு, வரட்டாறு, கோரையாறு ஆகிய 4 ஓடைகளை இணைத்து இந்த நதி கல்பாத்திக்கு வருகிறது. எனவே, இந்த ஆறு எந்த காலத்திலும் வறண்டதில்லை என்று இங்கு வசிக்கும் பெரியவர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட நதி தற்போது கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: கல்பாத்தி ஆறு மட்டு மின்றி, வாளையாறு, மலம்புழா, கோரையாறு ஆகியவற்றிலும் மணல் அள்ளினர். அரசு அதற்கு தடை விதித்தது. எனினும், அதன் பாதிப்பு தற்போது தெரிகிறது.

கடந்த ஆண்டே தென்மேற்குப் பருவமழை ஏமாற்றி விட்டது. பெரிய அளவில் மழை இல்லை. கடந்த 6 மாதங்களாக முற்றிலும் நீர்வரத்து குறைந்து, கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த 5 மாதங்களாக மலம்புழாவிலேயே தண்ணீர் இல்லை.

இருக்கின்ற நீரை சிக்கனமாக, குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட் டுள்ளது. முற்றிலும் வறண்டு காணப்படும் நதிக்கரையில் சடங்குகள் செய்யவும் தண்ணீர் இல்லை. இதுபோல வரலாறு காணாத வறட்சியை கல்பாத்தி ஆறு சந்தித்ததே இல்லை.

இந்த முறையாவது மழை வரும் என்று எதிர்பார்த்தோம். கடந்த 15-ம் தேதிக்கு முன்னரே கோடை மழை பெய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. குறைந்தது 28-ம் தேதிக்கு முன்பாவது தென்மேற் குப் பருவமழை ஆரம்பித்திருக்க வேண்டும். லேசான தூறல் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டும் இதுபோல மழை ஏமாற்றிவிட்டது.

நடப்பாண்டில் இன்னும் 2 நாட்களில் பருவமழை தொடங்கும் என்று வானிலை அறிக்கையில் கூறப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே கல்பாத்தி ஆறு பிழைக்கும். இல்லையேல் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in