சாலை விபத்தில் மூளைச்சாவு: அரசு பள்ளி ஆசிரியர் உடல் உறுப்புகள் தானம் - 5 பேருக்கு மறுவாழ்வு
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை அரசுப் பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.ஏழுமலை (45). அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 1-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ஏழுமலை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்று இரவு 8.30 மணி அளவில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கலைவாணி டாக்டர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து ஏழுமலையின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளை எடுத்தனர். ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளி களுக்கு டாக்டர்கள் பொருத்தினர். மற்றொரு சிறுநீரகம் மற்றும் கணையம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கும், இதயம் அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. அரசுப் பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
