தண்ணீர் லாரி மோதி மாணவர் பலி: தொடரும் சாலை விபத்து மரணங்களால் மக்கள் அச்சம்

தண்ணீர் லாரி மோதி மாணவர் பலி: தொடரும் சாலை விபத்து மரணங்களால் மக்கள் அச்சம்
Updated on
1 min read

நொளம்பூரில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 11-ம் வகுப்பு மாணவர் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். தொடரும் இது போன்ற மரணங்களால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வானகரம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் காந்திலால். ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மகன் நிகில் (17). இவர் முகப்பேர் கிழக்கில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு ஸ்கூட்ட ரில் அவரது நண்பர் ஒருவருடன் பள்ளி நோக்கி சென்றுள்ளார். நிகில் ஸ்கூட்டரை ஓட்டினார்.

நொளம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரது ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய நிகில் அதே இடத்தில் பலியானார். அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் தூக்கி வீசப்பட்டது. இதில், நிகிலின் நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் கோபத்தில் லாரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தை சேர்ந்த வீர காமு (38) என்பவரையும் தாக்கினர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த நொளம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மறியலில் ஈடுபட்ட பொது மக்களை சமாதானம் செய்தனர். நிகிலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் வீரகாமுவை கைது செய்தனர்.

3 மாணவிகள் பலி

கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, கிண்டியில் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மோதிய விபத் தில் 3 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடிநீர் லாரிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க குடிநீர் லாரிகளுக்கு கடுமை யான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தடுக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலோரின் எதிர்ப் பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in