இலங்கைக்கு எதற்காக போர்க் கப்பலை பரிசளிக்க வேண்டும்? - மத்திய அரசுக்கு சீமான் கேள்வி

இலங்கைக்கு எதற்காக போர்க் கப்பலை பரிசளிக்க வேண்டும்? - மத்திய அரசுக்கு சீமான் கேள்வி
Updated on
1 min read

மீனவர்களின் படகுகளை மீட்டுக் கொடுக்காத இந்திய அரசு, இலங்கைக்கு எதற்காக போர்க் கப்பலை பரிசளிக்க வேண்டும்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர் பிரிட்ஜோ கொலை செய்யப்பட்டதில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகை திரும்பப் பெற்றுக் கொடுக்காத இந்திய அரசு, இலங்கைக்கு எதற்காக போர்க் கப்பலை பரிசாக கொடுக்க வேண்டும்? இலங்கை ராணுவம் தமிழக மீனவரை சுடவில்லை என்றால், துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

நெடுவாசல், தாமிரபரணி, சேலம் உருக்காலை போன்ற போராட்டங்களை திசை திருப்புவதற்காக தமிழக மீனவர் கொலை செய்யப்பட்டாரா? இலங்கை அரசின் தாக்குதல் நடவடிக்கைகளை மத்திய அரசு கண்டித்து, ராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in