மாதொருபாகன் நாவலுக்கு தடை இல்லை: படைப்பாளிகளின் கருத்துரிமையை பாதுகாக்க 3 மாதத்தில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மாதொருபாகன் நாவலுக்கு தடை இல்லை: படைப்பாளிகளின் கருத்துரிமையை பாதுகாக்க 3 மாதத்தில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

'மாதொருபாகன்' நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், படைப்பாளிகளின் கருத்துரிமை, பேச்சுரிமையை பாதுகாக்க தமிழக அரசு கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நிபுணர் குழுவை 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பாக நாமக்கல், திருச்செங் கோடு பகுதிகளில் கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் சங்கம் சார்பில் எஸ்.தமிழ்ச் செல்வன், சென்னை உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எழுத்தாளர் பெருமாள்முருகன் 2010-ல் மாதொருபாகன் என்ற நாவலை தமிழில் எழுதினார். இது 2013-ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் விழா பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த பிரச்சினை யால், 2015 ஜனவரி 10-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பெரு மாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து எழுதி வாங்கியது. எனவே, அந்த முடிவு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முரு கனும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

அதேபோல இந்த நாவல் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி யும், ஆசிரியர் பெருமாள்முருகன் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யக் கோரியும் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம், வேல்முருகன், வெள்ளியங்கிரி ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, 150 பக்கத்துக்கும் அதிகமான மிக நீண்ட உத்தரவை நேற்று பிறப்பித்தது. அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

‘உன் கருத்தோடு நான் முரண்படுகிறேன். ஆனால், அந்தக் கருத்தைச் சொல்ல உனக்குள்ள உரிமையைக் காக்க என் உயிரையும் இழக்கத் தயார்' என்ற தத்துவஞானி வால்ட்டரின் வார்த்தைகள்தான் இந்த வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.

இப்போது காலங்கள் மாறுகிறது. முன்பு எது ஏற்கப்பட வில்லையோ, அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது. ஒரு நாவலை படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசிப்பாளரின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும். இல்லையெனில் அதை தூக்கி எறியட்டும். அதற்காக ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற் பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து தவறியுள்ளது. சமுதாயத் தில் பாரம்பரியமாக கடைபிடிக் கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர் தனது நாவலில் பிரதிபலித்துள்ளார். இதில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

எனவே, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது; யாரையும் கட்டுப்படுத்தாது. மேலும் பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நாவல் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

எந்தவொரு படைப்பாளிக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச் சினைகள் வரக்கூடாது என்பதற் காக வழக்கறிஞர் சுரேஷ், சில வழி காட்டுதல்களை அரசு பின்பற்ற லாம் என ஆலோசனைகள் சமர்ப்பித்துள்ளார். படைப்பாளி களின் கருத்துரிமை, பேச்சுரி மையை அரசு பாதுகாக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வெளிநபர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதை அரசு தவிர்க்க வேண்டும்.

படைப்பாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக கலை, இலக்கியம் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும். இதுபோன்ற அசாதாரண சூழல்களில் பாதிப்புக்குள்ளாகும் படைப்பாளிகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை கையாள அரசு அதிகாரிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கை பொறுத்தமட்டில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘மாதொருபாகன்’ நாவலை திரும்பப்பெற வேண்டிய அவசியமில்லை. “எழுத்தாளர், தான் சிறந்து விளங்கும் எழுத்துப் பணியில் மீண்டும் ஈடுபடும் வகையில் புத்துயிர் பெறட்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் வரவேற்பு

‘மாதொருபாகன்’ நாவலுக்கு தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in