

துரைப்பாக்கத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அவரது நண்பரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் சுவாதிகா. மணல், ஜல்லி, செங்கல் மொத்த வியாபாரம் செய்துவருகிறார். ஆனந்த் செல்வம் என்பவர் தன்னிடம் ஜல்லி மற்றும் கட்டிடப் பொருட்களை வாங்கிவிட்டு ரூ.6 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் சுவாதிகா புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள் விசாரணை நடத்தினார். அப்போது அவர் ஆனந்த் செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையின ரிடம் ஆனந்த் செல்வம் புகார் கொடுத்தார். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.சண் முகப்பிரியா உத்தரவின்பேரில், டிஎஸ்பி குமரகுருபரன் தலைமை யிலான 4 போலீஸார் நேற்று பிற்பகலில் நீலாங்கரை காவல் நிலையத்துக்குள் சாதாரண உடையில் நின்றனர். அப்போது ரசாயனப்பொடி தடவப்பட்ட ரூ.10 ஆயிரம் நோட்டுகளை சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாளிடம் ஆனந்த் செல்வம் கொடுத்தார். ஆனால் அதை கைகளில் வாங்காத கலியபெருமாள், அருகே நின்றுகொண்டிருந்த தனது நண்பரும், ரிசர்வ் வங்கி அலுவலக உதவியாளருமான ராஜேந்திரன்(40) என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார். அதன்படி ஆனந்த் கொடுக்க, அவர் வாங்கினார்.
இவை அனைத்தையும் மறைந்திருந்து கண்காணித்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.