ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை

ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை
Updated on
1 min read

மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படை படுகொலை செய்தது தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ''தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது,

''தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரணிமணியன் சுவாமி தான் என்பதை ஏற்கெனவே அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 140 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

தற்போது மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது ட்விட்டரில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரணிமணியன் சுவாமி கூறியுள்ளது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நிலைப்பாடா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை முடக்கிய குற்றத்திற்காகவும், தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in