Published : 02 Dec 2013 11:09 AM
Last Updated : 02 Dec 2013 11:09 AM

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு முனைப்புடன் செயல்படுகிறது: ஜெயலலிதா

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு முழுமையான முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவு கூர்ந்திடும் விதமாக ஆண்டு தோறும் டிசம்பர் 3-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்றிட வேண்டுமென்ற உயரிய நோக்கில், இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை வழங்குதல், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சையும், ஆலோசனைகளும் வழங்குதல் ஆகியவற்றுடன் கல்வியும் அளிக்கும் மாநில ஆதாரவள மையம், மாற்றுத் திறனாளிகளுக்கான உயர்த்தப்பட்ட மாதாந்திர உணவு மானியம், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள், வெளியூர் பேருந்துகளில் 75 சதவீத பேருந்துப் பயணச் சலுகை, குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது, பார்வையற்றோருக்குக்காக வாசிப்பவர்களுக்கு 2 இரு மடங்காகவும், தேர்வு எழுத உதவுபவர்களுக்கு 250 ரூபாயாகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டது, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோலால் இயங்கும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையினை 400-லிருந்து 1000-ஆக உயர்த்தியது, பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு எளிதில் பணி நியமனம் கிடைத்திட தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது போன்ற எண்ணற்ற தனித் தன்மையான திட்டங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தியமைக்காக இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இந்த ஆண்டு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான தேசிய விருது வழங்கப்படுவதிலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு முழுமையான முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று சம உரிமையுடன் வாழ்ந்திட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x