

தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டமும் நாளை தர்ணாவும் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான தீர்மானம் கடந்த 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்தத் தீர்மானத்துக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கக் கோரி பகத்சிங், எழிலரசு, மாரிமுத்து ஆகிய வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் கடந்த 8 நாள்களாக வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்தக் கோரிக்கைக்காக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமும், புதன்கிழமை தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவது எனவும் தீர்மானித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.