

சென்னையில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசே காரணம் என செய்தி வெளியிட்டதாக இரண்டு நாளிதழ்கள் மீது முதல்வர் ஜெயலலிதா கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தாமதமாக நீர் திறக்கப்பட்ட காரணத்தால் தான் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக டிசம்பர் 9-ம் தேதியன்று வெளியான பதிப்பில் 'டைம்ஸ் ஃஆப் இந்தியா' ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இதேபோன்ற செய்தியை டிசம்பர் 12-ம் தேதி தினமலர் தமிழ் நாளிதழும் வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு தரப்பில், ஏரியின் நீரை திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவெடுக்கும் வரை காத்திருக்க தேவையில்லை என்கிற விளக்கம் அளிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பான செய்திக் கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நாளிதழ்கள் வெளியிட்டிருப்பதாக சுட்டிக்காட்டியே தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.