

திருச்சியில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது மகளிர் நீதிமன்றம்.
பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த தீபக் சந்துருவதனம்(26) கடந்த 28.10.13 அன்று 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மனச் சோர்வுடன் காணப்பட்ட சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, நடந்த விவரங்களை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தீபக் சந்துருவதனத்தைக் கைது செய்தனர்.
திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெசிந்தா மார்டின், குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டும், சிறுமியை மிரட்டிய வழக்கில் 1 ஆண்டும் தீபக் சந்துருவதனத்துக்கு சிறை தண்டனை, ரூ.1,500 அபராதம் விதித்தார், கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தீபக் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.