

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். உடன், அமைச்சர்கள், உயரதிகாரிகள்.
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.3,511 கோடியிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.1,267.62 கோடி மதிப்பிலான 10 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,070 ஊரகக் குடியிருப்புகள், 11 ஊராட்சிகளுக்கு ரூ.1,138.41 கோடியில் 2 கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி,புதூர், விளாத்திகுளம் ஒன்றியங்களைச் சேர்ந்த 363 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.515.72 கோடி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.44.58 கோடி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.13.62 கோடி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் 24 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.7.06 கோடி, திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் வடசேரி மற்றும் 17 குடியிருப்புகளுக்கு ரூ.4.95 கோடி என மொத்தம் ரூ.1,724.34 கோடியில், 11.60 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கோவை மாநகராட்சி குறிச்சி, குனியமுத்தூரில் ரூ.591.14 கோடி, திருவள்ளூர் பொன்னேரியில் ரூ.62.82 கோடி என மொத்தம் ரூ.653.96 கோடியில், 4.96 லட்சம் பேர் பயனடையும் வகையில் பாதாள சாக்கடை திட்டங்களை தொடங்கி வைத்தார். வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் (செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை) பகுதிகளில் ரூ.74.74 கோடியில் குடிநீர் வழங்கல் பணிகள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரூ.68.70 கோடி, வில்லிவாக்கத்தில் ரூ.17.97 கோடி, கொடுங்கையூரில் ரூ.45.07 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.
பாதாள சாக்கடை திட்டம்: மேலும், மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை) மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) மண்டலங்களில் ரூ.188.07 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.106.42 கோடி, தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் ரூ. 134.33 கோடியில் கழிவுநீர் உந்துகுழாய் என ரூ.635.31 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.237.04 கோடியில் 62 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகளின் இயக்குநரகம் சார்பில்ரூ.174.45 கோடியில் 27 முடிவுற்ற பணிகள், சென்னை மாநகராட்சிசார்பில் ரூ.86.04 கோடியில் முடிவுற்ற 63 திட்டப் பணிகளையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 200 அடி சாலையில் ரூ.310 கோடியில் புதிய மேம்பாலம் உட்பட ரூ.335.62 கோடியில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.555.88 கோடியில் மேம்பாட்டுப் பணிகள், ரூ.376.12 கோடியில் பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூருக்கு குடிநீர் விநியோகப் பணிகள் என ரூ.932 கோடியிலான 2 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
புதிய வாகனங்கள்: தொடர்ந்து, சென்னை குடிநீர் வாரியத்தின் பயன்பாட்டுக்காக ரூ.47 லட்சம் மதிப்பில் 5 புதிய வாகனங்களுக்கான சாவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மா.மதிவேந்தன், மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.