ஆட்சிக்கு வந்தால் என்னை பதவியிறக்க முடியாது: விஜய்காந்த்

ஆட்சிக்கு வந்தால் என்னை பதவியிறக்க முடியாது: விஜய்காந்த்
Updated on
1 min read

ரிஷிவந்தியம் தொகுதியில் நூரோலை கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடையை திங்கள்கிழமை விஜயகாந்த் திறந்துவைத்தார். தொடர்ந்து அத்தியூர் ரேசன் கடையின் புதிய கட்டிடத்தையும் திறந்துவைத்தார். பின்னர் பகண்டை கூட்ரோடு சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் 114 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: நான் தொகுதிக்கு வருவது இல்லை என பலர் கூறுகின்றனர்.கடந்த 3 மாதங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் வரவில்லை.அரசை எதிர்த்துப் பேசினால் குடித்துவிட்டு பேசுகிறேன் என்று வதந்தி பரப்புகின்றனர். காவல்துறையினர் சாதிக்கப் பிறந்தவர்கள்.ஆனால், அவர்களது தற்போதைய நிலைமை அப்படி இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சம்பவத்தில் விஜயகாந்த் கோபப்படுகிறார் என்றனர். ஆனால். நான் கோபப்பட்டால் கூட்டணி கிடையாது. இதுவரை கருணாநிதியோ, ஜெயலலிதாவோ எத்தனை முறை தொகுதிக்குச் சென்றுள்ளனர்? நான் 11-வது முறையாக இப்போது தொகுதிக்கு வந்துள்ளேன்.

தே.மு.தி.க-வினர் மீது வழக்கு பதியும் காவல்துறை, வைகுண்டராஜன் மீது ஏன் வழக்கு பதியவில்லை? நான் போலீசை நம்புவதில்லை.என் தொண்டர்களை நம்புகிறேன் என்று பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த், ”வைகுண்டராஜன் பற்றி 2007- ல் செங்கோட்டையன் பேசியுள்ளார். அவருக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார், அவர்கள் எப்படி அவர் மீது வழக்கு பதிவு செய்வார்கள்? என்னை ஆட்சியில் உட்காரவைத்தால் திரும்ப இறக்கவே முடியாது. கடந்த ஆட்சியில் தி.மு.க. தீயசக்தி என்றார் ஜெயலலிதா. அவர்மீது கருணாநிதி வழக்கு போட்டாரா? எதிர்கட்சித் தலைவருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி மக்கள் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார். அப்போது எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in