அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு: காணொலி காட்சி மூலம் வெள்ளை சேலையில் ஆஜரானார்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு: காணொலி காட்சி மூலம் வெள்ளை சேலையில் ஆஜரானார்
Updated on
1 min read

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வி.கே.சசிகலா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் ஆஜரானார். அப்போது, அவர் சிறை உடையான வெள்ளை சேலையில் காணப்பட்டார்.

கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன், ஜெஜெ டிவி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் தற்போது எழும்பூர் 1-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர் ஹுசைன் முன்பு நடந்து வருகிறது. 4 வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சியில் சசிகலா நேற்று ஆஜரானார். மதியம் 12 மணி அளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் 3-வது தளத்தில் உள்ள காணொலி காட்சி அறையில் அமைக்கப்பட்ட திரையில் சசிகலா ஆஜரானார். அப்போது, இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞர் அய்யப்பன் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷும் ஆஜராகினர்.

‘‘உங்களுக்கு தமிழ் , ஆங்கிலம் இதில் எந்த மொழியில் கேள்விகள் கேட்கலாம்’’ என்று சசிகலாவிடம் நீதிபதி ஜாகிர் ஹுசைன் கேட்டார். அதற்கு சசிகலா ‘தமிழ்’ என்று பதிலளித்தார். அதையடுத்து சசிகலா, பாஸ்கரனிடம் ஜெஜெ டிவிக்கு உபகரணங்கள் மற்றும் அப்லிங்க் தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாகவும், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாகவும் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப் பட்டன. அனைத்து கேள்விகளுக் கும் ‘இல்லை, எனக்குத் தெரியாது’ என்றே சசிகலா பதிலளித்தார். மீண்டும் ஜூலை 1-ல் காணொலி மூலம் சசிகலா ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் பாஸ்கரனும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

சிறை சீருடையில் சசிகலா

காணொலி காட்சி மூலம் ஆஜரான சசிகலா, பெங்களூரு சிறை சீருடையான வெள்ளை நிற சேலையில் காணப்பட்டார். அவர் சோர்வுடன் உடல்நலம் குறைந்து காணப்படுவதுபோல பேசினார். சசிகலாவை காணொலி யில் பார்த்ததும் அவரது வழக்கறி ஞர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in