

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்பாதை ஓரமாக நடந்து சென்ற 4 பேர் மீது மின்சார ரயில் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில் வழித்தடங்களில் எப்போதும் மின்சார ரயில்கள் சென்று கொண்டே இருக்கும். ரயில் பாதையை மக்கள் கடந்து செல்வதைத் தடுக்க முக்கிய இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே, 4 இளைஞர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கடற் கரை நோக்கி வந்து கொண் டிருந்த மின்சார ரயில் மோதியதில் 4 பேரும் தூக்கி வீசிப்பட்டனர். இவர் களில், 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மட்டும் உயி ருக்கு போராடிய நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
சென்னை கோட்ட ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இறந்த 4 பேரின் கைப்பைகளில் சோதனை செய்தனர். அதில், பழைய துணிகள் இருந்தன. ஒருவரிடம் வாக்காளர் அடையாள அட்டையின் நகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மூலம் இறந்தவர்களில் ஒருவரின் பெயர் பிரசந்தாகரடா என்றும், இவர் ஒடிசா மாநிலம் கேராப்புட் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள நோட்டு புக் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு மீதமுள்ள 3 பேரின் விவரங்களை ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறும்போது, ‘‘மற்ற ரயில் பாதையை காட்டிலும் அதிகள வில் மின்சார ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. மற்ற ரயில் நிலையங்களைக் காட்டி லும், நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு இடைப்பட்ட தூரம் அதிகம் என்பதால், மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு மின்சார ரயில்கள் வேகமாக செல்லும். ரயில் நிலையங்களில் ரோந்து பணியில் இருக்கும்போது, ரயில் பாதையை கடக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால், ரயில் நிலையத்தையும் தாண்டி தூரத்தில் இருக்கும் சிறிய வழியில் அவசரமாக கடந்து செல்வதால், தான் இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன’’ என்றனர்.