

சென்னை அண்ணாசாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீரென மீண்டும் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு உடனடியாக மெட்ரோ அதிகாரிகள் விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திலேயே சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தன. தற்போது மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள சர்ச்பார்க் பள்ளியின் அருகே 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில் மாநகரப் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன. பேருந்து பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டு மீண்டும் நேற்று காலை முதல் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் அண்ணாசாலையில் விரிசல் ஏற்பட்டது. இம்முறை ஜெமினி பாலத்திலிருந்து ஆயிரம்விளக்கு செல்லும் பாதையில் 10 மீ அளவில் விரிசல் ஏற்பட்டது.
சாலையில் ஏற்பட்ட விரிசலை வேடிக்கை பார்க்கும்விதமாக பொதுமக்கள் யாரும் கூடவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்தமுறை அண்ணாசாலையில் பள்ளம் ஏற்பட்டபோது மண் வலுவிழப்பதால் இதுபோன்ற பள்ளம் ஏற்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உறுதி:
மெட்ரோ பணிகள் காரணமாக அடுத்தடுத்து ஒரே பகுதியில் பள்ளம், விரிசல் என ஏற்பட்டுவரும் நிலையில், விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படு என தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.