கோயில் காணிக்கை பொருட்கள் இறைவனுக்கே சொந்தம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

கோயில் காணிக்கை பொருட்கள் இறைவனுக்கே சொந்தம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
Updated on
1 min read

இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் உள்ளிட்ட எந்தப் பொருளாக இருந்தாலும் இறைவனுக்குத்தான் சொந்தம். அந்தப் பொருட்களுக்கு பூசாரிகள் உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

மதுரை பாண்டிமுனீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் ஆடு கள், சேவல்களை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி பூசாரிகள் இருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை சுற்றுச்சாலையில் உள்ள புகழ்பெற்ற பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ஆடு, சேவல்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வரும் ஆடு, சேவல்களை கோயிலின் வருமானத்தை பெருக்கும் வகையில் ஏலம் விடுவது தொடர்பாக அறநிலையத் துறை கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் கோயிலில் பல்வேறு சேவைகளுக்கு டிக்கெட் முறையை அறநிலையத் துறை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றுக்கு எதிராக கோயில் பூசாரிகள் பி.எம். பாண்டிய ராஜன், வி.கே.பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், இறைவனுக்கும், பக்தர்களுக்கும் மத்தியஸ்தராக பூசாரிகள் உள்ளனர். இதனால் இறைவனுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பொருட்களை அனுபவிக்க பூசாரிகளுக்கு உரிமை உண்டு. பூசாரி என்பவர் பக்தர்களின் துன்பங்கள், துயரங்களை தன்னுள் வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக இறைவனின் ஆசியை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பூசாரிகளின் இந்த சேவையை கவுரவிக்கும் விதமாக பக்தர்கள் பணம், பறவைகள், பிராணிகளை வழங்குகின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை வணிகமயமாக்கும் நோக்கத்தில் அறநிலையத் துறை ஆணை பிறப்பித்திருப்பது காலம் காலமாக பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உரிமையில் தலையிடுவதாகும். மேலும் கோயில் சேவை களுக்கு டிக்கெட் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் வருமானத்தில் பூசாரிகளின் பங்கை முடிவு செய்யாமல் டிக்கெட் முறையை அறிமுகம் செய்ய அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் வாதிடும்போது, கோயிலின் மொத்த உண்டியல் வசூலில் பூசாரிகளுக்கு 50 சதவீத வருமானம் வழங்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, கோழிகளை ஏலம் விடுவது தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை எதிர்த்து கோயில் பூஜாரிகள் என்ற முறையில் கேள்வி கேட்பதற்கு மனுதாரர்களுக்கு உரிமை கிடையாது.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் பணம் உட்பட எந்த பொருளாக இருந்தாலும் அது இறைவனுக்கு சொந்தமானது. காணிக்கையாக வழங்கும் பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பூஜாரிகளுக்கு பங்கு இல்லை. இறைவனுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பொருட்கள் பூஜாரிகளின் சொத்து ஆகாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in